தொழிலதிபர் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் மாற்றப்பட்ட முடிவு உயரிய மட்டத்தில் எடுக்கப்பட்டதாக சிபிஐ விளக்கமளித்துள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை பலவீனப்படுத்தியதும், நாட்டை விட்டு வெளியேற அவருக்கு அனுமதியளித்ததும் சிபிஐ அமைப்பில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிடித்தமான அதிகாரிதான் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிபிஐ அமைப்பில் இருக்கும் குஜராத் மாநில அதிகாரி ஏ.கே. ஷர்மாதான், மல்லையாவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக் அவுட் நோட்டீûஸ பலவீனப்படுத்தினார். மல்லையா தப்பியோடவும் அவர்தான் அனுமதித்தார்.

சிபிஐ அமைப்பில் இருக்கும் பிரதமர் மோடிக்கு பிடித்தமான அதிகாரி அவர். இந்த அதிகாரிதான், வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோர் தப்பியோடியதற்கும் காரணம் என்று அந்த பதிவுகளில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு மல்லையா சென்று விட்டார். இந்திய நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளிலும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், நாட்டை விட்டு மல்லையா வெளியேறுவதற்குபிரதமர் மோடியும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும்தான் உதவி செய்தனர் என்று காங்கிரஸ் கட்சியும், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பிரிட்டன் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நடக்கும் வழக்கு விசாரணையில் அண்மையில் ஆஜராக வந்த மல்லையா, நாட்டை விட்டு கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியேறும் முன்பு மத்திய நிதியமைச்சரை சந்தித்ததாக தெரிவித்தார். மத்திய நிதியமைச்சரின் பெயரை அவர் வெளியிடாதபோதும், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அருண் ஜேட்லிதான், மத்திய நிதியமைச்சராக இருந்தார். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

ஆனால், இதனை அருண் ஜெட்லி மறுத்துள்ளார். பார்லிமென்ட் வளாகத்தில் ஒரிரு நிமிடங்கள் தான் இந்த சந்திப்பு நடந்தது. கடன் சர்ச்சை தொடர்பாக வங்கி நிர்வாகத்திடம் பேசி கொள்ளுமாறு மல்லையாவிடம் கூறிவிட்டதாக விளக்கமளித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ செய்தி தொடர்பாளர் அபிஷேக் தயால் கூறியதாவது: லுக் அவுட் நோட்டீசை மாற்றும் முடிவு தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை. உரிய மட்டத்தில் ஆலோசனைக்கு பிறகு தான் எடுக்கப்பட்டது. ஏகே சர்மா மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.

மல்லையாவை கைது செய்யவோ, தடுத்து நிறுத்தவோ, அடிப்படை முகாந்திரம் இல்லாத காரணத்தினால் தான் நோட்டீஸ் மாற்றப்பட்டது என்பதை பல முறை கூறியுள்ளோம். இதனால், மல்லையோ, நிரவ் உள்ளிட்டோர் தப்பி செல்வதில் எந்த அதிகாரிக்கும் பங்கு உள்ளது என்ற கேள்வியே எழவில்லை. வங்கிகள் புகார் அளித்த உடனேயே நாங்கள் நடவடிக்கையை எடுக்க துவங்கிவிட்டோம்.

எதிர்கட்சிதலைவர்கள் குற்றசாட்டுக்கு ஆளும் கட்சியினர் தான் இயல்பாக பதில் அளிக்கும் ஜனநாயாக அடிப்படையில் முக்கிய குற்றசாட்டுக்கு ஒர் அரசு அதிகாரியை வைத்து பதில் அளிப்பது புதுமையாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள் ..ஆனால் இந்த யுக்தி எதிர்கட்சிகளின் குரலை பலபடுத்தவே உதவும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்