இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு சிங்கள ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் லட்சக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த போரின் போது சிங்கள ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டுகிறது. மேலும் போரின் போது மாயமானவர்களின் நிலை என்ன என்பது குறித்து இலங்கை அரசு பதில் அளிக்கவேண்டுமென அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் கட்டுமான பணிகளுக்காக குழி தோண்டியபோது பிணக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு மேலும் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய மாவட்டம் முழுவதும் குழி தோண்டும் பணிகள் தொடங்கியது.

இந்த பணி இன்று 79–வது நாளாக நீடித்தது. அப்போது அங்கு உள்ள ஒரு இடத்தில் குழி தோண்டியபோது அதில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 14 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது ஆகும். ஒரே குழியில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.