பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகளும், டான்ஸ் மாஸ்டருமான நடிகை காயத்ரி ரகுராம், சார்லி சாப்லின் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக நடித்தவர். தொடர்ந்து ஸ்டைல், பரசுராம், விசில், விகடன், வை ராஜா வை, தாரை தப்பட்டை உள்பட சில படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். மேலும் பாஜகவின் கலாச்சார பிரிவு செயலாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில சமயம் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து சர்ச்கைகளிலும் சிக்கிக் கொள்வார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வீக் எண்ட் பார்ட்டி நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர், நடிகையர் பலர் கலந்து கொண்டனர். காயத்ரி ரகுராமும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டு மது அருந்தியதாகத் தெரிகிறது. பின்னர் மது போதையில் தன் சொகுசு காரில் அவர் தாறுமாறாகக் சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே போலீசார் காயத்ரி ரகுராமின் வாகனத்தை தடுத்து நிறுத்தி, மதுபோதை பரிசோதனைக்கு உட்படுத்த முயன்றனர். ஆனால் அதற்கு காயத்திரி ரகுராம் ஒத்துளைக்காமல், ‘நீங்கள் தான் குடித்து விட்டு பணியில் உள்ளீர்கள்’ என போலீசாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஒரு வழியாக மதுபோதை சோதிக்கும் கருவியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் காயத்ரி ரகுராம் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதன்பிறகு, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு. ரூ.2500 அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் காரை ஓட்டிச் செல்ல அனுமதிக்காத போலீசார், தாங்களே அவரது காரை ஓட்டிச் சென்று வீட்டில் கொண்டு விட்டனர்.

பின்னர், அபராதத் தொகையை அபிராமபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் செலுத்திய பிறகு நேற்று தனது காரை அவர் அங்கிருந்து எடுத்துச் சென்றார் என்று கூறப்படுகிறது . இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் குறித்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ள காயத்ரி ரகுராம், “எதையோ மறைக்க என்னை செய்தியாக்கிவிட்டனர். நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள் ஆனால் நான் துணிச்சலுடன் வாழ்வேன்.

நான் எனது படப்பிடிப்பை முடித்து வீடு திரும்புகையில் என் சக நடிகரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார் வாகன சோதனை செய்தனர். மற்றபடி எனக்கும், அவர்களுக்கு எந்த வாக்குவாதமும் ஏற்படவில்லை. அங்கிருந்து 10 நிமிடங்களில் நானே காரை ஓட்டிக் கொண்டு வீடு சென்றேன்.

என்னை பற்றி செய்தி வெளியிட்ட நிருபர் தான் போதையில் இருந்திருப்பார் போலும். அவருக்கு என்ன என்ன தோன்றியதோ அத்தனையும் எழுதியுள்ளார். போதையில் இருந்த அந்த நிருபரை விட்டு என்னை குறிவைக்கின்றனர். இங்கு தனி மனித சுதந்திரம் என்பதே இல்லாமல் போய்விட்டது” என தெரிவித்துள்ளார்.