தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த நிகழ்விற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனக் குரல்கள் எழுப்பி வருகின்றனர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் பென்னீக்ஸ், செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். ஊரடங்கு காலம் என்பதால் கடையடைப்பது தொடர்பாக கடந்த ஜூன்.19-ம் தேதி காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பென்னீக்ஸுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப் போட்டு, பென்னீக்சையும் அவரது தந்தை ஜெயராஜையும் கைது செய்துள்ளார்கள். இவர்கள் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் ஜூன்.21-ம் தேதி அடைக்கப்பட்டுள்ளார்கள்.

பென்னீக்ஸ் 22-ம் தேதி நெஞ்சுவலியால் மயங்கி விழுந்தார் என்று கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பென்னீக்ஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் ஜெயராஜும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் மகனும் காவலர்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள் என்றும், அதனால் தான் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தார்கள் என்றும் அவர்களது உறவினர்கள், வணிகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சந்தேகம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிகழ்விற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டையே கொரோனா நோய்த் தொற்று பாதித்து பேரழிவை உருவாக்கி வரும் நெருக்கடி மிகுந்த இக்கால கட்டத்தில், வாய்த்தகராறு காரணமாக, அநியாயமாக இரண்டு உயிர்களைக் கொடூரமாகப் பறிக்கும் அளவுக்கு நடந்து கொண்டது காவல்துறை என்றால், இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா?

போலீஸ் லாக் அப்பில் இதுவரை நடந்த மர்ம மரணங்கள், இன்று நீதிமன்றக் காவல் என்று சொல்லப்படும் சிறைகளிலேயே பகிரங்கமாக நடக்கின்றன என்றால், இதற்கு உரிய பதிலளிக்க வேண்டியது உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தானே? மரணத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்! எப்போது கிடைக்கும் இந்நிகழ்வுக்குத் தீர்வு?” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: கோவையில் பொதுவெளியில் பள்ளி மாணவனை தாக்கிய போலிஸார்

இதுதொடர்பாக, வைகோ வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி பென்னிகஸ் மற்றும் அவரது தந்தை காவல்துறை தாக்குதலில் நிலைகுலைந்து இருந்த பென்னிகஸ் அவரது தந்தை ஜெயராஜும் உயிரிழந்துள்ளனர்.

இது முழுக்க முழுக்க சாத்தான்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளரும், காவல்துறையினரும் நடத்திய அப்பட்டமான படுகொலை என குற்றம்சாட்டுகிறேன். சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்ட் செய்து, தூத்துக்குடி கிளைச் சிறையிலோ அல்லது பாளையங்கோட்டை மத்திய சிறையிலோ அடைக்காமல், வெகு தூரத்தில் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறைக்குக் கொண்டு சென்றதிலிருந்தே காவல்துறையினரின் குற்றச் செயல் உறுதியாகிறது.

இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்வதோடு, கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இருவரது உடல்களையும் வெவ்வேறு மருத்துவமனைகளில் நிபுணத்துவம் பெற்ற மூன்று மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்திட வேண்டும். இச்சம்பவம் குறித்து உண்மை நிலையை வெளிக்கொணர, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என மதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.