கடன் வாங்க போலியான ஆவணங்கள் வழங்கிய புகாரில், நடிகர் ரஜினிகாந்த் மனைவிக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில், லதா ரஜினிகாந்த் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா இயக்கிய படம் கோச்சடையான். மீடியா ஒன் குளோபல் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. கோச்சடையான் படத் தயாரிப்பில் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையால் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் கடன் வாங்க முயற்சி மேற்கொண்டது.

இதற்காக மீடியா ஒன் குளோபல் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்திடம் உதவி கோரியது. இதனையடுத்து லதா ரஜினிகாந்த், சில ஆவணங்களை கொடுத்து ஆட் பியூரோ என்ற நிறுவனத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறார்.

லதா ரஜினிகாந்த் வழங்கிய ஆவணங்களை ஏற்று கொண்டு, ஆட் பியூரோ நிறுவனம் ரூ.6.84 கோடி கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடனை திரும்ப செலுத்த முடியாமல் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் திணறி உள்ளது. இதனைத்தொடர்ந்து லதா ரஜினிகாந்திடம் கேட்டபோது, அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆட் பியூரோ நிறுவனம், லதா ரஜினிகாந்த் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் போலியானது. இதனால் எங்களுக்கு ரூ.6.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பணத்தை லதா ரஜினிகாந்த் வழங்கவேண்டும் என்று பெங்களூரு அல்சூர்கேட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் பெங்களூரு அல்சூர்கேட் காவல்துறையினர் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பெங்களூரு 2வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் திங்களன்று (மார்ச் 29) லதா ரஜினிகாந்த் மீது குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்; குடியரசுத் தலைவர் ஒப்புதல்