போலியோ தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய ஒத்துழைப்பு வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் தயாராக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நடிகர் சங்கத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மதுரையை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்தியாவில் மக்கள் தொகை தற்போது 130 கோடியாக உள்ளது. இதில் 18 வயதிற்கு கீழ் 32 கோடி இளைஞர்கள் உள்ளனர். இந்தியாவில் போலியோ நோய் தாக்குதல் குழந்தைகள், சிறுவர்களுக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. குழந்தை வயதில் ஒரு முறை போலியோ நோய் தாக்கிவிட்டால், மரணம் அடையும் வரை அவர்களால் அந்த நோயில் இருந்த மீளமுடியாது.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் போலியோ நோய் பாதிப்பு இல்லாத நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1995 ல் போலியோ வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். வருடத்திற்கு 3 முறை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டும், இன்னும் இந்தியா போலியோ நோய் பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப்படவில்லை. வரும் காலங்களில் இந்தியா முழுவதும் முறையாக மற்றும் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த உத்தவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நடிகர்களில் அஜித், விஜய், சூர்யா மற்றும் நடிகர் சங்க செயலர் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் சூர்யா, விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி பல்வேறு சேவைகளை செய்து வருவதாக குறிப்பிட்டனர். தென்னிந்திய நடிகர் சங்க செயலர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போலியோ தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய ஒத்துழைப்பு வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் தயாராக உள்ளது.

இந்த சேவையில் தாமாக முன் வந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் நடிகர்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்தனர். இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.