1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டப்படும், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 02) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில், சமூகநீதிக் கொள்கையின் தாய்மடியாக விளங்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ் மாநிலம்.

வகுப்புரிமை, வகுப்புவாரி உரிமை, இடஒதுக்கீடு, சாதிரீதியான ஒதுக்கீடு என்று எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும், அதற்கு சமூகநீதி என்ற ஒற்றைச் சொல் கொடுக்கும் பொருளை வேறு எந்தச் சொல்லும் தருவது கிடையாது.

அத்தகைய சமூகநீதிக் கொள்கை தான் திராவிட இயக்கம், இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குக் கொடுத்த மாபெரும் கொடையாகும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்திய ஒன்றியத்துக்கே அந்தத் தத்துவத்தை திராவிட இயக்கம் கொடையாக வழங்கியது.

வகுப்புரிமை எனும் இடஒதுக்கீட்டு முறையை நூறாண்டுகளுக்கு முன் நடைமுறைக்குக் கொண்டு வந்தது நீதிக் கட்சிதான். அதன் மூலமாக மூடப்பட்டுக் கிடந்த கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப் பதவிகள் அனைத்தும் அனைவருக்குமானது.

சுதந்திர இந்தியாவில் அதற்குச் சட்டரீதியான இடர்பாடு வந்தபோது, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்து முன்னெடுத்த போராட்டம் தான் அது. அந்தப் போராட்டம் இந்தியத் துணைக் கண்டத்தையே கவனிக்க வைத்தது.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், அதனை அன்றைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்களிடத்திலே வலியுறுத்தியதன் காரணமாக, இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டின் சமூகநீதிக் கொள்கைக்கு இந்திய அரசியல் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. அப்படி சமூகநீதியை அடைய, பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம் தான் திராவிட இயக்கம்.

சமூகநீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில், 1987 ஆம் ஆண்டு 20% தனி இடஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில், அன்றைய அரசின் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்கள் 21 பேர்.

சமூகநீதிப் போராளிகளான அவர்களுடைய உயிர்த் தியாகத்திற்கும், போராட்டத்திற்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989 ஆம் ஆண்டு அமைந்த முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து,

அவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டினை வழங்கி, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அது அவர்களுடைய முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துத் தந்தது.

ஒடுக்கப்படும் சமுதாயம் எதுவாக இருந்தாலும், அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும், மீட்கப்பட வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழக அரசினுடைய உயர்ந்த நோக்கமாகும்.

அத்தகைய தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, 1987-ல் நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.4 கோடி செலவில் விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதி இது. யார் மறந்தாலும் நிச்சயம் நான் மறக்கவில்லை. யாரையும் மறக்க மாட்டேன். நான் சமுதாயத்தில் பின் தங்கிய வகுப்பை சார்ந்தவன். மிகவும் பின் தங்கிய வகுப்பினர் பட்டியலில் என் வகுப்புக்கு ஒரு இடம் உண்டு.

நான் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டு இருப்பதால் பின் தங்கிய வகுப்பினருக்காக என் உயிரையும் பணயமாக வைத்து போராடுவேன் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் சொன்ன வாசகம் இது. அந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டதன் அடையாளம் தான் இந்த அறிவிப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் நான் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். அரசு வேலைவாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டுமென்று வேல்முருகன், கோ.க.மணி அவர்களும் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். நிச்சயமாக அதுகுறித்து ஆய்வு செய்து, அரசு சார்ந்த நிறுவனங்களிலே, கல்வித் தகுதியின் அடிப்படையிலே நிச்சயமாக அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற அந்த உறுதியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல; மக்களுடைய வாழ்வாதாரத்தையும் உயர்த்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின்