வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் 43வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு, விவசாயிகளுடன் நடத்திய 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் வரும் குடியரசு தினத்தன்று கட்டுப்பாட்டை மீறி டெல்லியின் உள்ளே நுழைவோம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு இடையூறாக இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம், வன்முறை இல்லாமல் போராட்டம் நடத்தலாம் என கடந்த மாதம் 17 ஆம் தேதி உத்தரவிட்டு, பிரதான வழக்கை ஜனவரியில் விசாரிப்பதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று (ஜனவரி 07) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தாமாக முன்வந்து கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி,

விவசாயிகள் விவகாரத்தில் தற்போது வரை எந்த முடிவும் எட்டப்பாடமல் இருப்பது கவலை அளிக்கிறது. இருப்பினும் அவர்களின் வேதனைகளை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது என தெரிவித்தார்.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, அரசு தரப்பில் விவசாய அமைப்புகளுடன் பேச்சு வாரத்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் முன்னதாக நடந்ததில் பல்வேறு முன்னேற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம் என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு நிலைமையும் நீதிமன்றம் புரிந்து கொள்கிறது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

போராட்டத்தில் விவசாயிகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றுகிறார்களா.. உச்சநீதிமன்றம்