ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின் போது வேகமாக வெளியில் பிடித்து இழுத்ததில், கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தையின் உடல் மட்டும் வெளியில் வந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தின் கர்ப்பிணி ஒருவர் அரசு சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பிரசவத்தின் போது ஆண் செவிலியர் வேகமாக குழந்தையை வெளியில் பிடித்து இழுத்துள்ளார்.
 
இதில் குழந்தையின் உடல் பகுதி மட்டும் துண்டாக வெளியில் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர், உடனே குழந்தையின் உடலை மறைத்து விட்டு, இன்னும் குழந்தை பிறக்கவில்லை எனவும், சிக்கல் இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறும் கூறியுள்ளனர்.
 
இதனை கேட்டு கர்ப்பிணியின் கணவர் திரிலோக் சிங் உடனடியாக தன்னுடைய மனைவியை ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
 
அங்கு குழந்தையின் தலை மட்டும் உள்ளே இருப்பதை பார்த்த மருத்துவர்கள், பெண்ணின் உறவினர்களுக்கு தெரியப்படுத்திவிட்டு அறுவை சிகிச்சை செய்து தலையை வெளியில் எடுத்தனர்.
 
பின்னர் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் முதற்கட்ட தகவலாக, பிரசவம் பார்த்த செவிலியர் போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
 
மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த குழந்தையின் உடல்பகுதியையும் போலீசார் மீட்டெடுத்துள்ளனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.