பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்யக்கோரி, திமுக சார்பில் இன்று மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி., “தமிழகத்தில் பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது. பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயர்களை காவல்துறையே கூறியது. இன்று வரை அந்த கும்பல் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருகின்றனர்.

ஆளுங்கட்சியினர் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். அதிமுகவினருடனான ஆதாரங்கள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. எஸ்.பி.வேலுமணிக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதிமுக அமைச்சர், துணை சபாநாயகர், நிர்வாகிகளுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என புகைப்படங்களை காட்டினார்.

இத்தனையும் தாண்டி பல பேரை காப்பாற்றவே அருளானந்தத்தை காப்பாற்ற துடிகின்றனர். எந்த அளவிற்கு இந்த விசாரணையை தடுத்து கொண்டிருக்கிறார்கள். இதை தட்டி கேட்கவில்லை என்றால், பெண்களை என்ன வேண்டுமானாலும் பண்ணலாம், நாதியில்லை என்ற நினைத்து விடுவார்கள். இந்த சூழலை உருவாக்கி விடக்கூடாது.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும், அருளானந்தத்தை அதிமுக காப்பாற்றியதற்கு காரணம் அவருக்கும் மேலே இருப்பவர்களை பாதுகாக்கத்தான்; பொள்ளாச்சி பாலியல் கொடூரக் குற்றவாளிகள் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” எனக் கூறினார்.

முன்னதாக போராட்டத்தில் பங்கேற்க கோவை விமான நிலையத்திலிருந்து பொள்ளாச்சியில் போராட்டம் நடைபெறவுள்ள இடத்திற்கு சென்று கொண்டிருந்த கனிமொழி எம்.பி., மற்றும் திமுகவினர் கற்பகம் கல்லூரி அருகே வந்த போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து சாலையில் அமர்ந்த கனிமொழி எம்.பி. உள்ளிட்ட திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி கொடூரத்தை எதிர்த்து கனிமொழி தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்- மு.க.ஸ்டாலின்