பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற ஆளும் கட்சியே போராடுவது கடும் கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை காமுகர்கள் கூட்டம் ஒன்று கொடூரமான பாலியல்வன்முறைக்குட்படுத்தியிருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியும் அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.சில நிமிடங்களே நீடிக்கும் அந்த வீடியோவைப் பார்க்க முடியாத அளவுக்கு அபலை மாணவிகள் அலறித் துடிக்கும் காட்சிகள் உள்ளன.
 
இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் துணையாக இருப்பதும் நக்கீரன்-ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது. 
 
பொள்ளாச்சிப் பகுதியில் பொதுமக்களும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 
நீண்ட நாட்களாக நடைபெறும் இந்த மிகப் பெரிய அளவிலான பாலியல் வன்முறையில் ஒரு துளி மட்டுமே வெளிவந்துள்ளது. 
 
காவல்துறை தரப்பிலும் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. சிக்கியவர்களைத் தப்பவிடுவதற்காக ஆளுந்தரப்பு பகீரத முயற்சி எடுத்து வருகிறது.
 
தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் இளம்பெண்களை சீரழிக்கும் மிக மோசமான ஒரு கலாச்சாரத்திற்கு ஆளுங்கட்சியான அ.தி.மு.க. துணை போவது கடும் கண்டனத்திற்குரியது.தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
 
பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால நலன் பாதுகாக்கப்படும் வகையில் விசாரணை நடைபெற வேண்டும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.அ.தி.மு.க. ஆட்சியின் 8 ஆண்டு காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு சென்னை தொடங்கி பொள்ளாச்சி வரை ஏராளமான கொடூர நிகழ்வுகள் நடந்துள்ளன.
 
பொள்ளாச்சியில் நடந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனை வலியுறுத்தி, தி.மு.கழகம் சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் தனது போராட்டத்தை மேற்கொள்ளும் என தனது அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
 
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பொள்ளாச்சியில் நாளை தி.மு.க நடத்த உள்ள போராட்டத்துக்கு நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம்” என்றார் .
 
மேலும் பொள்ளாச்சி வழக்கில், 100 சதவிகிதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கூறியுள்ளார். பெண்ணைத் துன்புறுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும், குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பில்லை. அரசியல் தொடர்பும் இல்லை. இது தொடர்பாக தவறான செய்தி பரப்புவது தவறு. அப்படிச் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
 
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நேரிடையாக தலையிட விஷயம் கைமீறி போவதை உணர்ந்த அதிமுக தனது கட்சி நிர்வாகியை நீக்கம் செய்துள்ளது ..
 
திமுக கூட்டணி கட்சியான ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் உள்ளத்தை உறைய வைக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் மிருகங்களை விடக் கொடிய இப்பாவிகளைக் தண்டிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.