முன்னாள் சிஏஜி வினோத் ராய், 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான கருத்துகளை வெளியிட்டதற்காக டெல்லி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2011 ஆம் ஆண்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அப்போதைய ஒன்றிய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) வினோத் ராய் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் சிஏஜி ஆடிட்டர் வினோத் ராய் அளித்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2ஜி முறைகேடுகளை அம்பலப்படுத்தியதாக வினோத் ராய் பெரிதாக பாராட்டப்பட்டார்.

ஆனால் 2ஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ போதிய ஆதாராங்களை சமர்ப்பிக்காததால் தோல்வியை தழுவியது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஓ.பி.சைனி, உண்மையில் ஊழல் நடக்கவில்லை, அப்படி நடந்ததாக பிம்பம் உருவாக்கப்பட்டது.

மேலும் வழக்கு தொடர்பாகக் கூறப்பட்டவை அனைத்தும் புரளியும் புனைவுமாக இருப்பதால், இதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று அதிரடியாக தீர்ப்பளித்தார். இதனையடுத்து வழக்கில் இருந்து ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2ஜி வழக்கில் அப்போதை பிரதமர் மன்மோகன் சிங்கையும் தொடர்புபடுத்தி பேசப்பட்டது.

இந்த 2ஜி வழக்கு குறித்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு அர்னாப் கோஸ்வாமி நடத்திய பேட்டியில் பேசிய சிஏஜி வினோத் ராய், 2ஜி ஊழல் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயரை சேர்க்கக்கூடாது என்று தன்னை காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிருபம் நிர்பந்தித்ததாக கூறியிருந்தார்.

இதனையடுத்து வினோத் ராய் தம்மீது அவதூறு பரப்பியதாக சஞ்சய் நிருபம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொய்யான அறிக்கை அளித்ததற்காக வினோத் ராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சஞ்சய் நிருபம் கோரியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் இன்று (28.10.2021) பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வினோத் ராய், “சஞ்சய் நிருபமுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.

மேலும் 2014 ஆம் ஆண்டு அர்னாப் கோஸ்வாமி எடுத்த பேட்டியில் தான் கூறியதில் உண்மையில்லை என்றும் தான் அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் வினோத் ராய் குறிப்பிட்டுள்ளார்”.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஞ்சய் நிருபம், “2ஜி மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது தவறான அறிக்கை சமர்ப்பித்து அவதூறு பரப்பிய குற்றத்திற்காக நாட்டு மக்களிடம் வினோத் ராய் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.