மக்கள் நலன் கருதி இயங்கி வரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, குத்தகைக்கு விடுவது என தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு உகந்தது அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 02) பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு தனியார்மயமாக்கும் நடவடிக்கை தொடர்பாக, காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொதுத்துறை நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ள அனைவருடைய சொத்து. பொருளாதார வளர்ச்சிக்கும் சிறு, குறு தொழிலுக்கும் ஆணிவேராக இருப்பது பொதுத்துறை நிறுவனங்கள்தான்.

லாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், மக்கள் நலன் கருதி இயங்கி வரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது. இம்முடிவைத் தமிழகம் கடுமையாக எதிர்க்கும். எனவே, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் முடிவைக் கைவிடக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதவுள்ளேன் என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்த ரூ.23 லட்சம் கோடி எங்கே.. ராகுல் காந்தி!