பேருந்துகள் குறித்த புகார்களுக்கு உதவி மையத்தைத் தொடர்பு கொள்ள 1800 599 1500 என்ற இலவச எண்ணை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைக் கண்டறியவும், அவர்களின் குறைகள் மற்றும் புகார்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவும், ஒருங்கிணைந்த பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி மையம் அமைக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பொதுமக்கள் உதவி மையத்தைத் தொடர்பு கொள்வதற்காக 1800 599 1500 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி பயணம் செய்யும் பயணிகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார்கள், குறைகள் மற்றும் தகவல்களையும் பெறலாம்.

பயணிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து அழைப்புகளைப் பெறுவதற்கான வசதி பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட புகார்கள் மற்றும் குறைகள் பிரத்யேக அடையாள எண் ஒதுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஒப்புகை குறுந்தகவல் பயணிகளுக்கு அனுப்பப்படும். பெறப்பட்ட புகார்கள் மற்றும் குறைகளை அந்தந்த போக்குவரத்து கழகங்கள் உடனுக்குடன் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் மற்றும் பொதுமக்கள், பேருந்துகளின் தூய்மை, தாமதமாக இயக்குதல், பேருந்து பழுதடைதல், பேருந்து நிலையங்களில் உரிய பேருந்துகள் இல்லை, பேருந்து நிலையங்களில் அதிக நேரம் காத்திருப்பது, பேருந்து நிறுத்தங்களில் அதிக நேரம் காத்திருப்பது, ஓட்டுநர்கள் பேருந்து நிறுத்தங்களைத் தவிர்ப்பது, பயணிகளின் பொருட்கள் தொலைந்து போவது, பேருந்துகளில் பணியாளர்கள் தவறான நடத்தை, சக பயணிகளால் துன்புறுத்தல், பேருந்துகளை மோசமாகப் பராமரித்தல், விபத்துகள், வெள்ளம், கலவரங்கள் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம்.

பேருந்து இயக்கம் தொடர்பான விசாரணை, பண்டிகைக் கால சிறப்பு பேருந்து இயக்கம் போன்ற தகவல்களையும் பெறலாம். விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்த எச்சரிக்கை செய்திகளை பணியாளர்கள் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் புகார் மற்றும் குறைகளை தங்கள் தொலைபேசியிலிருந்து “கூகுள் குரல் உதவி” வழியாக மேற்கண்ட இலவச எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெறப்படும் புகார்கள் மற்றும் குறைகளை அந்தந்த போக்குவரத்து கழகங்கள் கண்காணிக்கலாம். புகார்கள் மற்றும் குறைகள் தீர்க்கப்பட்ட பிறகு, புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பயணிகளுக்கு மீண்டும் குறுந்தகவல் தெரிவிக்கப்படும். இத்திட்டத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்க தேவையான நபர்கள் புகார் மையத்திலும் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களிலும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தினசரி, வாராந்திர, மாத அடிப்படையிலான மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு போக்குவரத்து கழக வாரியான புகார் மற்றும் குறைகள் குறித்த விவரங்கள் பற்றிய அறிக்கைகள் வழியாக போக்குவரத்துக் கழகங்களின் மேலாளர்கள், பயணிகளின் புகார்கள்/குறைகள் மீது கவனம் செலுத்தி, பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பேருந்து சேவையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதனால் பேருந்து இயக்கத்தில் பயணிகளின் திருப்தியை மேலும் அதிகரிக்க முடியும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.