தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் பெண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா உட்பட மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. குரூப் மற்றும் நாக்-அவுட் என 23 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த தொடரில் இந்திய அணி குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணியுடன் கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (12.02.2023) விளையாடியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கியது இந்திய அணிக்கு தொடக்கம் நல்லவிதமாக இருந்தது. ஷெபாலி வர்மா மற்றும் யாஸ்திகா பாட்டியா இன்னிங்ஸை தொடங்கினர். யாஸ்திகா, 17 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் களத்திற்கு வந்தார். 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஷெபாலி வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த ரிச்சா கோஷ் உடன் 58 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஜெமிமா.

ஜெமிமா ரோட்ரிகியூஸ் 38 பந்துகளில் 53 ரன் குவித்து ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 31 ரன் எடுத்தார். இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 58 ரன் குவித்தது இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது.

இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.