பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் விழ்ச்சிக்கும் இந்திய பணமதிப்பு வீழ்ச்சிதான் காரணம் என பொருளதார வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என இருந்து வந்த நிலையில் இப்போது 72 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதுவும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொருளாளர் அகமது பட்டேல், பொறுப்பாளர் அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்நிலையில், அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி போராட்டம் மற்றும் அடைப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் விவசாயிகள், சிறு வணிகர்கள், நகர மக்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த போரட்டத்துக்கு கூட்டணி தலைவர்கள் மற்றும் எதிர்கட்சிகள் அதரவையும் காங்கிரஸ் கோரி உள்ள நிலையில் திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அதரவு தெரிவித்துள்ளன