புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள், உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்று கொண்டு ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள் என்று மோடிக்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் அரசியல் தொடர்பான தன் கருத்துகளைத் சமூக வலைதளத்தில் அவ்வப்போது தெரிவிப்பவர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சைக் குறிப்பிட்டு அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பலகோட்டில் இந்திய விமானப் படை குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது என்பதற்கு ஆதாரம் என்ன என பல எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிய நிலையில், மோடி அது பற்றி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்.

சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது, ‘இந்த மண்ணுக்காக நான் சபதம் ஏற்றுள்ளேன். இந்த மண் வீழ நான் விடமாட்டேன். இந்த நாடு செயல்படாமல் நின்று போகவும் அனுமதிக்க மாட்டேன். நாடு வளைந்து போகவும் அனுமதிக்க மாட்டேன். எனது தாய் நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதி இது.

உங்கள் தலை பிறரை வணங்கும் வகையில் விட மாட்டேன். நான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளோ என்னை ஒழித்துக்கட்ட சதி செய்கின்றன’ என்று மோடி பேசியுள்ளார்.

நடிகர் சித்தார்த், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து தனது டுவிட்டர் பதிவில், ”நம் மக்கள் ராணுவத்தின் பக்கமும் ராணுவ வீரர்களின் பக்கமும் தான் நிற்கிறார்கள். ராணுவம் தாக்குதல் நடத்தியதை மக்கள் நம்புகின்றனர். ஆனால் உங்களையும், உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை.

முதலில் புல்வாமாவை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்கள் பின்னால் ஒளிந்துகொண்டு ஹீரோவைப் போல நடிக்க வேண்டாம். நீங்கள்தான் படையினரை மதிக்க வேண்டும். நீங்கள் ராணுவ வீரர் இல்லை. அப்படி உங்களை நடத்த வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகின்றது.