இந்தியாவிடம் இருந்து 375 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று (28.1.2022) கையெழுத்தானது.

உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணைகளில் ஒன்றாக பிரமோஸ் ஏவுகணை உள்ளது. இது ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்தியாவிற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன.

இந்த ஏவு கணைகளை நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும். இந்த ஏவுகணையின் வேகம் Mach 8 (ஒலியின் வேகத்திற்கு சமம்). இந்த ஏவுகணையின் பறக்கும் தூரம் 290 கி.மீ ஆகும். இதனால் 300 கிலோ எடையுள்ள வெடிசுமந்து எதிரி இலக்கை தாக்க முடியும்.

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

கடற்கரையில் இருந்து கப்பல்களை தாக்கக்கூடிய ஏவுகணைகளை வழங்குவதற்காக பிலிப்பைன்ஸ் குடியரசின் தேசிய பாதுகாப்புத் துறையுடன் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூட்டு நிறுவனமாகும். பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 375 மில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பிரமோஸ் ஏவுகணைக்கான முதல் வெளிநாட்டு ஆர்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பான பாதுகாப்பு ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் இந்திய அரசின் கொள்கைக்கு இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான படியாகும் என ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரமோஸ் தலைமை நிர்வாக அதிகாரி அதுல் டி. ராணே, துணை தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் ஜோஷி, லெப்டினன்ட் கர்னல் ஆர். நேகி மற்றும் பிரவீன் பதக் கலந்து கொண்டனர்.