சின்னத்திரை நடிகை சித்ரா (வயது 28) சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பரவிவரும் தகவல்கள் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1992ம் ஆண்டு மே 2 ஆம் தேதி சென்னையில் பிறந்த சித்ரா, 2013ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன நிகழ்ச்சியில் முதன் முதலாக தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார்.

தொகுப்பாளினியாக இருந்து படிப்படியாக முன்னேறி திரைப்படங்களிலும் நடித்துள்ள சித்ரா, தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியிலும் அசத்தியுள்ளார். தற்போது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து, இந்த தொடர் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இவருக்கு ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீப நாட்களாக சின்னத்திரை தொடரில் தொடர்ந்து நடித்து வருவதால், பூந்தமல்லி அருகே உள்ள நசரத் பேட்டையில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியிருந்து டிவி தொடரில் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் தனது வருங்கால கணவருடன் தங்கியிருந்த சின்னத்திரை நடிகை சித்ரா, இன்று அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து நடிகை சித்ரா சடலமாக மீட்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அவர் கன்னத்தில் ரத்த காயம் உள்ளது. முகம் வீங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர் கழுத்தில் சுருக்கு மாட்டியதற்கான அடையாளமோ, கண்கள், நாக்கு வெளியே தள்ளியது போன்ற அடையாளம் தென்படவில்லை என்று அவரது உடலை பார்த்த ஓட்டல் ஊழியர்களும், பொதுமக்களும் கூறி வருகின்றனர்.

இதனால் சித்ரா, தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் அறிக்கையைத் தொடர்ந்து தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.

இந்நிலையில், சித்ராவுக்கும் தனக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன்பாகவே பதிவு திருமணம் நடைபெற்றதாக ஹேமந்த் கூறியுள்ளார். இதனால், ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், முகப்பேர் மேற்கு கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விவசாயிகள் போராட்டம்; போலி செய்தி பரப்பியதற்காக மன்னிப்பு கோரி நடிகை கங்கனாவிற்கு நோட்டீஸ்