கீர்த்தி சுரேஷ் பாஜகவில் சேர்ந்துவிட்டதாக எழுந்த சர்ச்சையையடுத்து, பிரதமர் மோடி உடனான தனது சந்திப்பு குறித்து, நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா. தமிழில் ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். கீர்த்தி சுரேசின் தந்தை சுரேஷ் மலையாள சினிமா தயாரிப்பாளர். கீர்த்தி சுரேஷின் பாட்டியும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மேனகா சுரேஷ் சமீபத்தில் டெல்லி சென்று பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். இதனால் மேனகா பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் பரவின.

இதற்கு விளக்கம் அளித்துள்ள மேனகா, என்னுடைய கணவர் சுரேஷ் தான் பாஜகவில் இருக்கிறார். எனக்கு அக்கட்சியின் உறுப்பினர் அட்டை கூட கிடையாது. எந்தக் கட்சியிலும் நான் இல்லை. கீர்த்தியும் என்னைப் போலத் தான் இருக்கிறார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக கணவர் சார்ந்துள்ள பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லி சென்றிருந்தேன். பிரசாரம் முடிந்த உடன் சினிமா நட்சத்திரங்கள் சிலர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தனர். அவர்களுடன் எனக்கும் அழைப்பு வந்தது. அதில் சுரேஷ் கோபி, கவிதா உள்ளிட்ட சிலர் இருந்தனர். எனவே நானும் சென்றேன்.

பாஜக அலுவலகத்தில் நடந்த சந்திப்பின் போது, குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். ஆகையால் நான் பாஜகவில் இணைத்துவிட்டேன் என்ற வதந்திகளை நம்பாதீர்கள். எனக்கும், என் மகள் கீர்த்திக்கும் அரசியல் ஈடுபாடு கிடையாது என்று மேனகா சுரேஷ் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.