இந்தியா கடைசியாக வாங்கியது Su-30 எனப்படும் சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996இல் வாங்கியதுதான் கடைசி. அதன்பிறகு போர் விமானங்களே இந்தியா வாங்கவில்லை.

உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001இல் தேஜஸ் எனப்படும் இலக ரக போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமானது. (2016இல்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்டது.) இதற்கிடையில் மிக்21 ரக போர்விமானங்களின் ஆயுள் காலம் முடிந்து வந்த்தால், புதிய போர் விமானங்களின் தேவை உணரப்பட்டது. 2007இல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. பிரான்சின் தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல், ரஷ்யாவின் மிக்-25, ஸ்வீடனின் கிரிபென், அமெரிக்காவின் F-16, Boeing F/A-18, Eurofighter Typhoon ஆகியவை பங்கேற்றன. இவற்றில் டைஃபூன், ரபேல் மட்டுமே தகுதி பெற்றன.

பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல்தான் உகந்தது என முடிவானது. 126 ஜெட் போர்விமானங்களில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். தஸால்ட் தொழில்நுட்பத்தை வழங்க, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. ஆனாலும், இறுதி விலை எட்டப்படவில்லை.

HAL மற்றும் தஸால்ட் இடையே வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது. ஆனால் 2014 ஏப்ரலில் தேர்தல் வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருகிறது. புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, எல்லா விஷயங்களும் பரிசீலிக்கப்பட்டு அறிவார்ந்த முடிவு எடுக்கப்படும் என்றார்.

திடிர் என 2015 ஏப்ரலில் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். 36 ரபேல் விமானங்கள் வாங்கப்போவதாக அறிவிக்கிறார்.இந்த சமயத்தில் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்கிறார் அன்றைய பாதுகாப்பு மந்திரி மனோகர் பரிக்கர்.

பிரான்ஸ் அதிபர் ஹாலந்த் 2016 ஜனவரியில் தில்லி வருகிறார். 7.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ரபேல் விமானங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

சரி இதில் ஊழல் எங்கிருந்து வந்தது பார்ப்போமா..

1. ஒரு விமானத்தின் விலை
— முந்தைய காங்கிரஸ் அரசு வாங்க இருந்தது சுமார் 600 கோடி ரூபாய் விலையில்.
— மோடி அரசு வாங்குவது சுமார் 1400 கோடி ரூபாய் விலையில்!

2. உற்பத்தி – மேக் இன் இந்தியா
— முந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்
— மோடி ஒப்பந்தப்படி, எல்லாமே பிரான்சில்தான் தயாரிக்கப்படும். மேக் இன் இந்தியா எல்லாம் ஸ்வாஹா சொல்லி விட்டது பாஜக சர்க்கார்

3. தொழில்நுட்பம்
— காங்கிரஸ் கால ஒப்பந்தத்தில், தஸால்ட் நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும்
— ஆனால் மோடி அரசு ஒப்பந்தப்படி, “சிலதனியார் நிறுவனங்களுக்கும்” தொழில்நுட்பம் தரப்படும். அந்தத் தனியார் நிறுவனம் எது? அதுதான் ரிலையன்ஸ்.

4. பாதுகாப்பு யாரிடம் இருக்க வேண்டும்
— காங்கிரஸ் கால ஒப்பந்தப்படி, தஸால்ட் உடன் எச்ஏஎல் என்னும் பொதுத்துறை அரசு நிறுவனம்தான் கூட்டாளி.
— மோடி அரசு ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ்தான் தனியால் கம்பெனி தான் கூட்டாளி.

5. அனுபவம்
— எச்ஏஎல் விமானத்துறையில் அனுபவம் உள்ள நிறுவனம். ஏற்கெனவே போர் விமானங்களை தயாரித்துக்கொண்டும் உள்ளது. எனவே காங்கிரஸ் அரசு எச்ஏஎல்-தான் உற்பத்தி செய்யும் என்று சொன்னது.
— மோடி அரசில் முடிவு செய்யப்பட்ட ரிலையன்சுக்கு விமானத்துறையில் எந்த அனுபவமும் இல்லை.

மோடியின் மீது விழும் ஊழல் கறை

2015இல் பிரான்சுக்குச் சென்றபோது ரபேல் விமானங்கள் வாங்குவதாக தடாலடியாக அறிவித்தார் மோடி. இதுபோன்ற பல்லாயிரம்கோடி ஆயுதங்கள் வாங்கும் விஷயங்களில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்புத் துறை அமைச்சரும்கூட உடன் அழைத்துச்செல்லப்படவில்லை. ரஃபேல் விமானங்கள் சரியான விலைக்கே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதிக விலை கொடுக்கப்படவில்லை என்றார் விமானப்படைத் தளபதி தனோவா. ஆயினும் ஒரு விமானத்தின் விலை என்ன என்ற தகவல் என்னிடம் இல்லை என்றும் சொன்னார் அதே பேட்டியில் அதே தளபதி தனோவா விமானப்படைத் தளபதிக்கே தெரியாமல் போர் விமானங்கள் வாங்கப்படுவது மோடி அரசில் மட்டுமே சாத்தியம்.

இதுபோன்ற விஷயங்களில் போர்விமானம் குறித்த தொழில்நுட்பம்தான் ரகசியமே தவிர, விலை ரகசியமாக வைக்கத் தேவையில்லை. ஆனால் மோடி அரசு விலையை ரகசியம் என்கிறது. முந்தைய காங்கிரஸ் அரசு விலையை ரகசியமாக வைக்கவில்லை.

ரபேல் ஊழலில் ரிலையன்ஸ் விவகாரம் வெளியே வந்ததும், “ரிலையன்சுக்கும் தஸால்டுக்கும் என்ன ஒப்பந்தம் என்று எங்களுக்குத் தெரியாது. தஸால்ட் தனக்கு விருப்பமான கூட்டாளியைத் தேர்வு செய்யலாம், அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று இத்தனை காலம் சொல்லிக் கொண்டு வந்தார்கள் மோடியும் அவரது ஊழல் கூட்டாளிகளும்

ஆனால் “மோடி அரசு, ரிலையன்ஸ்தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது, எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை” என்று முன்னாள் பிரான்ஸ் அதிபரே சொல்லி விட்டார். அவர்தான் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்.

மக்கள் பணத்தில் உருவான, இந்திய அரசுக்குச் சொந்தமான, பொதுத்துறை நிறுவனம் எச்ஏஎல் எப்படிப் போனால் என்ன, ரிலையன்ஸ்தான் தனக்கு முக்கியம் என்று சொல்லாமல் சொல்லி விட்டார் மோடி.

2015இல் தடாலடியாக அறிவிக்கும்போது இது ஜி2ஜி (கவர்மென்ட்-டு-கவர்மென்ட்) ஒப்பந்தம் என்று சொன்னார்கள். ஜி2ஜி என்றால் ரிலையன்ஸ் எப்படி வர முடியும்? எச்ஏஎல்தானே இருந்திருக்க வேண்டும்?

எச்ஏஎல் நிறுவனத்துக்கு தகுதி கிடையாது, அது சீரழிந்து விட்டது என்று திருவாய் மலர்ந்தார் நிர்மலா சீதாராமன். அதே எச்ஏஎல் நிறுவனம் தேஜஸ் போர் விமானத்தை தயாரித்து விமானப்படைக்கு அளித்தபோது பிரதமர் வாழ்த்தியது இப்படி – Induction of indigenously made Tejas fighter jet into the Air Force fills our hearts with unparalleled pride and happiness. I laud HAL & ADA on the induction of Tejas fighter jet. This illustrates our skills & strengths to enhance indigenous defence manufacturing. (1 July 2016)

2016இல் சிறப்பாக செயல்பட்ட எச்ஏஎல் 2018இல் சீரழிந்து விட்டதா? அப்படியானால் அதற்குக் காரணம் இதே சர்க்கார்தான் என்கிறாரா நிர்மலா சீதாராமன்

இந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் எப்போது உருவானது? மோடி பிரான்ஸ் செல்வதற்கு சில நாட்கள் முன்னதாக திடீரென உருவானதுதான் ரிலையன்ஸ் டிபென்ஸ். முதலீடு வெறும் 5 லட்சம் ரூபாய். கம்பெனி ரெஜிஸ்டிராரிடம் பதிவு செய்த விவரம் கீழே படத்தில் உள்ளது.

வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் நேற்று முளைத்த ஒரு கம்பெனிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய போர் விமானங்களின் பணி தரப்படுவது மோடி சர்க்காரில் மட்டுமே சாத்தியம்.

2015 ஏப்ரலில் பிரான்ஸ் சென்ற மோடி, ரபேல் விமானம் வாங்கப்படும் என அறிவிக்கிறார். அப்போது அம்பானியையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார். அதற்கு முந்தைய மாதம் வரை ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியே கிடையாது. ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனி பதிவானது 2015 மார்ச் 28ஆம் தேதி. அதாவது, பிரான்ஸ் செல்வதற்கு ஒருவாரம் முன்னால் அம்பானியை கம்பெனி துவக்கச் செய்து, பிரான்சில் அம்பானியின் லாபத்துக்காக வேலை பார்த்திருக்கிறார் மோடி.

கட்டுரை எழுதியவர் ஷாஜஹான் சில மாற்றங்களை சேர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது ..