ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினரிடம் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், அரசியல் தலைவர் என பலரும் தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, இன்று (9.12.2021) சோனியா காந்தியின் 74வது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாட இருந்த காங்கிரஸ் கட்சியினரிடம் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட வீரர்கள் உயிரிழந்த நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும்,

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்த பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை நிறுத்தும்படியும் சோனியா காந்தி கூறியுள்ளார்.

https://www.facebook.com/savenra/posts/7497350016957523