தாங்கள் சம்பந்தப்பட்ட எந்தவிதமான சொந்த வீடியோக்களையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றத்தில் கர்நாடக பாஜக அமைச்சர்கள் 6 பேர் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார், விவசாயத்துறை அமைச்சர் பிசி பாட்டில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாராயண கவுடா, கூட்டுறவுத் துறை அமைச்சர் எஸ்.டி சோமசேகர்,

நகர வளர்ச்சித் துறை அமைச்சர் பைரதி பசவராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் உள்ளிட்ட 6 பாஜக அமைச்சர்களும் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தங்கள் சம்பந்தமான எந்தவிதமான சொந்த வீடியோக்களையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது எனக் கூறியுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை பாரதிய ஜனதா ஆட்சியின்போது மூன்று அமைச்சர்கள் சட்டசபைக்குள் ஆபாச வீடியோக்களை பார்த்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அமைச்சர்கள் மூன்று பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்கள் முன்பு, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராஜேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனால் அமைச்சர் ராஜேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தது மட்டுமல்லாமல், வேறு ஒரு அமைச்சருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுபோன்று தொடர்ந்து பாஜக அமைச்சர்கள் பாலியல் புகாரில் சிக்குவது கர்நாடக அரசியலில் பல்வேறு விவாதங்களையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபாச வீடியோவில் சிக்கிய பாஜக அமைச்சர் பதவி ராஜினாமா!