இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தற்போது ‘ஒத்த செருப்பு சைஸ் 7′ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மீது அவரது உதவியாளர் ஜெயங்கொண்டான் என்பவர் புகார் அளித்துள்ளார். பார்த்திபன் வீட்டில் வேலை செய்து வந்தவர் ஜெயங்கொண்டான். திருவான்மியூரில் உள்ள பார்த்திபனின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததை அடுத்து ஜெயங்கொண்டான் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் பார்த்திபன் மீது, ஜெயங்கொண்டான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, பார்த்திபன் என்னை பணியில் இருந்து நீக்கினார். அதற்கான காரணத்தை கேட்க அவரை சந்திக்க சென்றேன். ஆனால் அவரோ பதில் அளிக்காமல் கோபம் அடைந்து என்னை அடித்து, மாடியில் இருந்து தள்ளிவிட்டார். என்னை அவர் கொலை செய்ய முயன்றார். என்னை தாக்கிய பார்த்திபன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில், “பார்த்திபன் கொலை செய்ய முயற்சி’ ஹ்யூமர் சென்ஸ்க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது! என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர். மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.