ராஜஸ்தானில் நடந்த ரூ.900 கோடி மதிப்புள்ள சஞ்சீவானி கடன் கூட்டுறவு சங்கம் ஊழல் வழக்கு தொடர்பாக பாஜக நீர்வளத்துறை அமைச்சராக உள்ள கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் விசாரணை நடத்த ஜெய்ப்பூர் நீதிமன்றம், போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சஞ்சீவானி கடன் கூட்டுறவு சங்கத்தில் ரூ.900 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று, ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறப்புப் பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்ட பாஜக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அவரின் மனைவி, உறவினர்கள் சிலரின் பெயரையும் சிறப்பு போலீஸார் சேர்த்துள்ளனர். இது தொடர்பான குற்றப்பத்திரிகையிலும் கஜேந்திர சிங் ஷெகாவத் பெயரை போலீஸார் சேர்த்திருந்தனர். ஆனால், கஜேந்திர சிங் ஷெகாவத் பெயர் சேர்க்கப்பட்டதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்தது.

இதனையடுத்து, கஜேந்திர சிங் ஷெகாவத் பெயரை நீக்கியதை எதிர்த்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி பவண் குமார், கஜேந்திர சிங் ஷெகாவத்தை விசாரிக்க கூடுதல் தலைமை மாஜஸ்திரேட் நீதிபதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். கூடுதல் நீதிபதி உத்தரவின் பெயரில் ஷெகாவத்திடம் விசாரிக்க போலீஸாருக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான முதல்வர் அசோக் கெலாட் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஈடுபட்டார் என்றும், அது தொடர்பான உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்பை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்தவும் சிறப்புப் பிரிவு போலீஸார் பாஜக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் சஞ்சீவானி கடன் கூட்டுறவு சங்கம் ஊழல் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக உள்ள கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் இலவச ரேஷன்.. மம்தா அதிரடி