விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்ட பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராகும்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கடந்த 2019 ஆம் ஆண்டு கோயில்களின் வடிவமைப்புகள் குறித்து பேசியது சர்ச்சையானதை அடுத்து, திருமாவளவனை கடுமையாக விமர்சித்து, தனது ட்விட்டர் பதிவில் நடிகை காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து காயத்ரி ரகுராமுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர். மேலும், விசிக சட்டப்பிரிவு துணை செயலாளரான வழக்கறிஞர் ஏ.காசி என்பவர் சென்னை சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, களங்கம் ஏற்படுத்தம் வகையில் நடந்து கொண்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுத்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிபதி கவுதமன், வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகை காயத்ரி ராகுராமுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

ஒன்றிய அரசை விமர்சித்ததாக நடிகை மீது தேச துரோக வழக்கு- லட்சத்தீவில் அரங்கேறும் அவலம்