நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட திட்டமிட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இறங்கியுள்ளார். 
 
இதுதொடர்பாக எற்கனவே முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி நிறுவன தலைவர் முலாயம் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
 
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மம்தா பானர்ஜி, ஜனவரி 19-ம் தேதி பாஜக எதிர்ப்பு அணியின் சார்பில் பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவித்தார்.
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பு ஒத்த கருத்து உள்ள கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். பாஜக எதிர்ப்பு கூட்டணியின் தலைவராக யார் இருப்பார்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, தமது அணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடியை விட மூத்தவர்கள் என்றும் தெரிவித்தார்.