காஷ்மீர் பிரிவினவாதிகளை ஆதரித்து ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் வெளியிட்ட டிவீட் வைரலாகி #BoycottHyundai ட்ரெண்டான நிலையில், அதுகுறித்து விளக்கமளித்துள்ளது ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம்.

ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் (@hyundaiPakistanOfficial) பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதியப்பட்டிருந்தது.

பாகிஸ்தானில் ஹூண்டாய் டீலர் ஒருவர் காஷ்மீர் ஒற்றுமை தினத்துக்கு ஆதரவு தெரிவித்து அந்தப் பதிவை வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஹூண்டாய் நிறுவனம் எடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்தியளவில் #BoycottHyundai ட்ரெண்டானது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு எதிரான குரல் வலுத்தது. இந்நிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை தனது அதிகாரபூர்வ சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளது.

அதில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியச் சந்தைக்கு உண்மையாக இருக்கிறது. இந்திய தேசியவாத கொள்கையை மதிப்பில் நாங்கள் இதுவரை உறுதியுடன் இருக்கிறோம்.

ஹூண்டாய் பிராண்டுக்கு இந்தியா இரண்டாவது வீடு என்றே சொல்வோம். உணர்வற்ற சில கருத்து எங்கள் பெயரில் பகிரப்பட்டிருக்கலாம். ஆனால் நாங்கள் எப்போதும் இதுபோன்ற விஷயங்களில் துணியும் சகிப்புத்தன்மை காட்ட மாட்டோம்.

@hyundaiPakistanOfficial வெளியான கருத்தினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் கொள்கைக்கு ஏற்ப நாங்கள் இந்தியாவின் இந்திய மக்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் 1967ல் தொடங்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இதன் கிளைகளில் 1,20,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நமது நாட்டில் மாருதி சுஸுக்கி இந்தியா நிறுவனத்துக்கு பிறகு அதிக அளவு கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஹூண்டாய் நிறுவனமாகும்.

இந்தியாவில் 2028க்குள் எலக்ட்ரிக் வாகனங்களைக் கொண்டுவரும் முனைப்பில் கடந்த டிசம்பர் 2021ல், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவில் ரூ.4000 கோடி முதலீடு செய்யும் திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.