பாகிஸ்தானின் நீதிபதியாக ஹிந்துப் பெண் ஒருவர் முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் இரண்டு சதவீதம் மட்டுமே உள்ளனர். இஸ்லாமியர்களுக்கு அடுத்தப்படியாக அங்கு இந்துக்கள்தான் அதிகமாக வாழ்கிறார்கள்.
 
முன்னதாக இந்து சமயத்தை சேர்ந்த ராணா பகவன்தாஸ் என்பவர் அங்கு நீதிபதியாக பணியாற்றியுள்ளார். அவர் கடந்த 2005 முதல் 2007 வரையில் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.
 
இந்நிலையில் பாகிஸ்தானின் நீதிபதியாக ஹிந்துப் பெண் ஒருவர் முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
இதுதொடர்பாக பாகிஸ்தானின் டான் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு:
 
பாகிஸ்தானின் காம்பார்-ஷாக்தாத்கோட்டை சேர்ந்த சுமன் குமாரி பொதானி பாகிஸ்தானின் முதல் ஹிந்துப் பெண் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
பாகிஸ்தானின் ஐதராபாத்தில் எல்.எல்.பி.யை முடித்துள்ளார். பின்னர் தன்னுடைய சட்ட மேற்படிப்பை கராச்சியில் உள்ள சுஷாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.
 
சுமன் குமாரின் தந்தை கண் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவருடைய மூத்த சகோதரி மென்பொருள் பொறியாளராகவும், இளைய சகோதரி பட்டய கணக்காளராகவும் பணியாற்றி வருகிறார்கள்.
 
தற்போது நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் தனது சொந்த மாவட்டத்திலேயே பணியாற்ற உள்ளார்.
 
பாகிஸ்தானில் இந்து மதத்தை சார்ந்த பெண் ஒருவர் நீதிபதியாவது இதுவே முதன்முறை என்பதால், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.