பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை 2021 (Vehicle Scrappage Policy) செயல்படுத்தப்பட்டு இருப்பது நாட்டின் வளர்ச்சி பாதையில் ஒரு புதிய மைல் கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, நாம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். தற்போதில் இருந்து அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. இந்த 25 ஆண்டுகளில், நமது பணி, தினசரி வாழ்க்கை, தொழில் மற்றும் வணிகத்தில் மாற்றங்கள் ஏற்பட போகிறது.

நமது வாழ்க்கை முறை அல்லது பொருளாதாரம் ஆகட்டும்,தொழில்நுட்பமானது மாறி வருகிறது. இந்த இரண்டிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. இந்த சவால்களுக்கு மத்தியில், நமது சுற்றுச்சூழல், நிலம், இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம் எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பழைய வாகனங்களை அகற்றும் கொள்கையை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “இந்தக் கொள்கை வாகனத் துறைக்கும், புதிய இந்தியாவின் போக்குவரத்துக்கும் ஒரு புதிய அடையாளத்தை வழங்கப் போகிறது.

மேலும் தகுதியற்ற வாகனங்களை அறிவியல் ரீதியில் சாலைகளில் இருந்து அகற்றி, நாட்டின் வாகன எண்ணிக்கையை நவீனமயமாக்க இந்தக் கொள்கை மிகப்பெரிய பங்கு வகிக்கும். வாகன இயக்க நவீனமயமாக்கல் பயணம் மற்றும் போக்குவரத்து சுமையைக் குறைப்பதுடன் மட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவு உதவிகரமாக இருக்கும்.

நாட்டின் நகரங்களில் மாசைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, வளர்ச்சியை விரைவுபடுத்தும் நமது உறுதிப்பாட்டை இந்தக் கொள்கை பிரதிபலிக்கிறது. இந்தக்கொள்கை ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீட்டை ஈர்ப்பதுடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்றார்.

மேலும் இந்தக் கொள்கையின் ஒவ்வொரு வழியிலும் பொதுமக்கள் பெரும் பயனடைவார்கள். பழைய வாகனத்தை அழிக்கும் போது ஒரு சான்றிதழ் வழங்கப்படுவது முதலாவது பயனாகும். இந்தச் சான்றிதழை வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் புதிய வாகனம் வாங்கும் போது, பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.

இத்துடன், சாலை வரியில் அவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். இரண்டாவது பயன், பராமரிப்பு செலவு, பழுதுபார்ப்பதற்கான செலவு, பழைய வாகனத்தில் எரிபொருள் திறன் ஆகியவை இதன் மூலம் மிச்சமாகும்.

மூன்றாவது பயன் ஆயுளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. பழைய வாகனங்கள் மற்றும் பழைய தொழில்நுட்பங்களால் ஏற்படும் பெரும் அபாயத்திலிருந்து விடுதலை. நான்காவதாக, நமது பூமியை மாசுபடுத்துவது குறையும்” என்று கூறியுள்ளார்.

விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி- இஸ்ரோ