மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிர்சா முண்டா என்பவர், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய பழங்குடியின போராளி. நாட்டு விடுதலைக்காக 25 வயதிலேயே தனது உயிரை தியாகம் செய்தவர். மேற்கு வங்க மாநில பழங்குடியின மக்கள் அவரை தெய்வமாக வழிபடுகிறார்கள்.

மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை அடுத்து, இப்போதே மத்தியில் ஆளும் பாஜக அங்கு பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பங்குரா பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

இப்பகுதி பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அவர்கள் ஆதரவை பெறும் வகையில் அங்குள்ள பிர்சா முண்டா சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அமித்ஷாவும், சிலைக்கு மாலை அணிவித்தார்.

ஆனால் அமித்ஷா மாலை அணிவித்தது பிர்சா முண்டா சிலைக்கு அல்ல. அது பழங்குடியின வகுப்பை சேர்ந்த வேட்டைக்காரர் ஒருவரின் சிலையாகும். தவறு தெரிய வந்ததும் பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

அவசரம் அவசரமாக பிர்சா முண்டாவின் புகைப்படம் எடுத்து வரப்பட்டு, அந்த புகைப்படத்தை வைத்து அமித்ஷா மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாஜக அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், “மேற்கு வங்காளத்தின் பாங்குராவில் புகழ்பெற்ற பழங்குடித் தலைவர் பகவான் பிர்சா முண்டா ஜிக்கு இன்று மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிர்சா முண்டா ஜியின் வாழ்க்கை எங்கள் பழங்குடி சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவரது தைரியம், போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் தொடர்ந்து நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கின்றன” என பதிவிட்டுள்ளார்.

இதனால் அங்குள்ள பழங்குடியின மக்கள் கொந்தளித்துள்ளனர். “யாரோ ஒருவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, பிர்சா முண்டா சிலைக்கு மாலை அணிவித்ததாக சொல்லி அவரை அவமானம் செய்து விட்டார் அமித்ஷா” என பழங்குடியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இச்செயல் அப்பகுதியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலால் அதிர்ச்சியான பாஜக அமைச்சர்கள் தொடர் புலம்பல்கள்