தனியார் பள்ளி தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், நெல்லை டவுன் எஸ்.என்.ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்போது பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக சென்று கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று (17.12.2021) காலை வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு சென்று பயின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியில் இன்று காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி டி.விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர்.சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்திய குமார், பாளை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் மற்றும் நிலைய வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான மாணவர்களின் உடல்களை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் எம்.இசக்கி பிரகாஷ், எஸ்.சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட 4 மாணவர்கள் படுகாயமுற்று நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், துணை ஆணையர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்து சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சுவர் இடிந்து சக நண்பர்கள் பலியானதால் மாணவர்கள் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த பொருட்கள், வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை அடித்து, உடைத்து சூறையாடினர். காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு உடனடியாக விடுமுறை விடப்பட்டது. இதனால் மற்ற மாணவர்களை காவல்துறையினர் பத்திரமாக அங்கிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி சென்ற மாணவர்கள் சுவர் இடிந்து பலியான சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகவும் வேதனையுற்று உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் ரூபாயும், காயமுற்ற 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.