நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் எந்த நேரமும் வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
இந்த தேர்தலில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட தயார் ஆகி வருகின்றன. பெரும்பாலான அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தைகளை நேரடியாகவும், திரை மறைவிலும் முடுக்கி விட்டுள்ளன.
 
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஆளும் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் களம் இறங்குவது உறுதியாகி உள்ளது.
 
தமிழ்நாட்டில் ஜெய லலிதா, கருணாநிதி என்ற இரு மிகப்பெரிய அரசியல் ஆளுமைகள் இல்லாத நிலையில் புதிதாக அரசியல் களத்தில் குதித்துள்ள ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இந்த தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
 
இதில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்துள்ள கமல் ஹாசன் முந்திக்கொண்டு, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
அதே நேரத்தில் ரஜினிகாந்த், நாடாளுமன்ற தேர்தல் குறித்து இதுவரை தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்து வந்தார்.
 
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ரஜினிகாந்த் நேற்று சென்னையில் அதிரடியாக கூட்டினார்.
 
போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
 
அந்த கூட்டத்தில் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி விவரம் பிவருமாறு “வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை.நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்த கட்சிக்கும் கிடையாது.
 
அதனால், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ, மன்றத்தின் கொடியோ எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.
 
தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினை தண்ணீர். வர இருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர் களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
 
இவரின் இந்த முடிவு பாஜகவுக்கு பெரும் பின்னடவு எனஅரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்