தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள “இளையராஜா 75” நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை நடிகர் விஷால் மற்றும் இளையராஜா நாளை தொடங்கி வைக்கின்றனர்.

தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பணியை பாராட்டி விழா எடுக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியை, தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுதாக தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பெருமையுடன் வழங்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 2, 3-ந் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும், இளையராஜா 75 விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இதற்கான டிக்கெட் விற்பனை தொடக்க நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. வரும் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு, செங்கல்பட்டு அருகே மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் நடைபெறும் 5-வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவில் டிக்கெட் விற்பனை நிகழ்ச்சி தொடங்குகிறது.

இந்நிகழ்வின் போது, ‘இளையராஜா 75’ என்று எழுதப்பட்ட பிரமாண்ட பலூன்கள் பறக்கவிடப்படும். மேலும், இளையராஜாவும், நடிகர் விஷாலும் தனித்தனி பலூன்களில் பறந்து சென்று டிக்கெட்டி விற்பனையை தொடங்கி வைக்க இருக்கின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.