வரலாற்று சிறப்புமிக்க பாரீஸ் ஒப்பந்தத்தின் செயல் திட்டத்திற்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
 
போலாந்தின் கடோவைஸ் நகரில் இரண்டு வாரங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மாநாட்டின் தலைவர் மைக்கேல் கர்டிகோ,’யாருக்கும் பின்னடைவை ஏற்படுத்தாத வகையில் செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது’, என்று கூறினார்.
 
பருவநிலை மாற்ற உடன்பாட்டை ஒருங்கிணைந்து நடைமுறைக்கு கொண்டு வருவது மிகப்பெரிய பொறுப்பு என் அவர் குறிப்பிட்டார்.
 
இந்த உடன்பாட்டின் மூலம் பூமியின் வெப்ப நிலை உயர்வு 2 டிகிரி செல்சியசுக்குள் பராமரிக்கப்படும், 2020ம் ஆண்டுக்கு முன்பாகவே கரிய அமில வாயு வெளியேறும் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை அடைய போலாந்தில் நடந்த பேச்சுவார்த்தையில் 200 நாடுகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
 
மேலும் இதனிடையே பருவநிலை குறித்த அடுத்த மாநாட்டை சிலியில் நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. புவி வெப்பமடைவதலின் மோசமான விளைவுகளை தடுக்க இந்த முயற்சி போதுமானதல்ல என சுற்றுசூழல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
 
முன்னதாக புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான பாரீஸ் ஒப்பந்தம் 2015ல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.