2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை பாராளுமன்றத்தில் இன்று (1.2.2022) காலை 11 மணிக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

கேள்வி நேரமின்றி நேரடியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கம் முந்தைய ஆண்டுகளைப் போலவே தொடங்கியது. ஒன்றரை மணி நேரம் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை வாசித்த நிதியமைச்சர், சரியாக நண்பகல் 12.30 மணிக்கு தமது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.

2022-23 ஆம் ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டில் வெளியான முக்கியமான அறிவிப்புகள்:

2022-23இல் இந்திய அரசின் பயனுள்ள மூலதனச் செலவு ரூ.10.68 லட்சம் கோடியாக இருக்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1% ஆகும்.

பண மேலாண்மையை சிறப்பாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்ளும் வகையில் பிளாக் செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 2022-23 முதல் டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும்.

வரும் நிதியாண்டில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 80 லட்சம் குறைந்த விலை வீடுகள் 48,000 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்படும்.

நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் எளிதில் பத்திரப்பதிவு மேற்கொள்ள “ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு” திட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுகுறு தொழில்களும், அரசாங்கமும் இதில் இணைந்து கொள்ளும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

டிஜிட்டல் வங்கி சேவையை ஒவ்வொரு குடிமகனுக்கும் எடுத்துச் செல்லும் நோக்கில், நாட்டின் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகள் தொடங்கப்படும்.

ஐடி ரிட்டர்ன்களை தாக்கல் செய்த 2 ஆண்டுகளுக்குள் மக்கள் புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்யலாம். அதாவது வருமான வரி தாக்கல் செய்து அதில் இருக்கும் பிழையை திருத்த வேண்டுமானால் அதை இரண்டு ஆண்டுகளில் வரி செலுத்துவோர் செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்று குறைந்தபட்ச வரி 18.5% லிருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ECLGS) 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும். உத்தரவாதத் தொகை ரூ.50,000 கோடியிலிருந்து மொத்தம் ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.

இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி செல்பேசி சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு வசதியாக, அலைக்கற்றை ஏலம் 2022-ல் நடத்தப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய “வந்தே பாரத்” ரயில்கள் தயாரிக்கப்படும். 2,000 கிமீ ரயில் வலையமைப்பு பாதுகாப்பு மற்றும் திறன்கள் உள்நாட்டு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பமான KAWACH-இன் கீழ் கொண்டு வரப்படும்.

‘மேக் இன் இந்தியா’ மூலம் 6 மில்லியன் புதிய வேலைகளை உருவாக்க முடியும்.

கல்வி வழங்க டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட கல்வி இழப்பை ஈடுசெய்ய 1-வகுப்பு 1-டிவி சேனல் 200 டிவி சேனல்களாக விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் 1 முதல் 12 வகுப்புகளுக்கு அனைத்து பிராந்திய மொழிகளில்
துணைக் கல்வியை வழங்க முடியும்.

2022-23ல் தேசிய நெடுஞ்சாலைகள் 25,000 கி.மீ. தூரம் அமைக்கப்படும்.

ஒன்றரை லட்சம் அஞ்சல் நிலையங்களும் கோர் பேங்கிங் முறையில் இணைக்கப்படும்.

வரும் நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் முறை அறிமுகம் செய்யப்படும்.

கென்-பெட்வா இணைப்பு முறையில் 44,605 கோடி ரூபாய் செலவில் 9 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

பேட்டரி ஸ்வாப்பிங் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டுக்கு இடையேயான சேவை உருவாக்கப்படும்.

2025க்குள் கிராமங்களில் ஆப்டிகல் ஃபைபர் அமைக்கும் பணி நிறைவடையும்.

பொருளாதாரத்தில் கார்பன் அடிச்சுவடு முன்முயற்சியைக் குறைக்க பொதுத்துறை திட்டங்களில் இறையாண்மை பசுமைப் பத்திரங்கள் வெளியிடப்படும்.

டிஜிட்டல் சொத்து பரிமாற்றத்திற்கு 30% வரி. டிஜிட்டல் சொத்துகளின் பரிசுகளுக்கும் வரி விதிக்கப்படும். மெய்நிகர் மற்றும் டிஜிட்டல் சொத்துக்களை விற்பனை செய்தல் அல்லது கையகப்படுத்துதல் ஆகியவற்றில் இருந்து வரும் வருமானம் இதில் அடங்கும்.

ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களிடையே சமத்துவம் தேவை என்ற நோக்கத்துடன் மாநில அரசு ஊழியர்களுக்கு EPF மீதான வரி விலக்கு அளிக்கப்படும்.

பாரம்பரிய மலைப்பகுதி சாலைகளுக்கான பர்வதமாலா திட்டம், தனியார் பொதுத்துறை கூட்டு முயற்சியின் கீழ் கொண்டு வரப்படும்.

சமையல் எரிவாயு உஜ்வாலா திட்டம் மேலும் ஒரு கோடி குடும்பங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

தரமான மனநல ஆலோசனை மற்றும் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்த, தேசிய டெலி மென்டல் ஹெல்த் திட்டம் தொடங்கப்படும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் அறிமுகம் செய்யப்படும். இது மாநில அரசுகளைப் பங்காளியாக ஆக்கும். இது தற்போதுள்ள தொழில்துறை பகுதிகளை உள்ளடக்கும் மற்றும் ஏற்றுமதியின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் தனி நபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக இருக்கிறது. தற்போதும் அதே நிலையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.