உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பசுமைத்தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில், பசுமைத்தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.
 
இந்த நிலையில், தங்களை விசாரிக்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்ககூடாது என்று ஸடெர்லைட் நிர்வாகம் இன்று உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
 
கடந்த மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
 
இதனையடுத்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
தமிழக அரசின் முடிவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. விசாரணையின் போது தீர்ப்பாய உத்தரவின் படி அமைக்கப்பட்ட ஓய்வு நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆலை மற்றும் சுற்றுவட்டாரங்களை ஆய்வு செய்தது.
 
பின்னர் அக்குழு அளித்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் திறக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இதை தமிழக அரசு எதிர்த்தது. இது தொடர்பான வழக்கில், அரசு தரப்பில் வாதிடப்பட்டது ‘கடந்த இருபது ஆண்டுகாலமாக சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. இதை ஆராய்ந்து பார்த்தால் ஆண்டுக்கொரு முறை நிலத்தடி நீர் மாசு வித்தியாசப்படுவது தெளிவாக தெரியும்.
 
இதற்கு முக்கிய காரணம் ஆலையில் காப்பர் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஜிப்சம்,காப்பர் கழிவுகள், கேஸ், மற்றும் சல்பரிக் ஆசிட் ஆகியவற்றால் தான் நிலத்தடி நீர் முழுவதுமாக மாசடைந்துள்ளது.
 
இதில் காற்று மாசும் அடங்கும். மேலும் ஆலை விவகாரத்தில் ஆய்வு நடத்த ஓய்வு நீதிபதி தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்புக் குழுவும் சரியான ஆய்வை மேற்கொள்ள தவறிவிட்டது. ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
 
இதற்கு வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அடுத்த ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 10ம் தேதி உத்தரவிட்டது.
 
கடந்த இரு நாட்களுக்கு முன் ஸ்டெர்லைட்டை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது.
 
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவேண்டும், ஆலையை திறப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆட்சியார் செய்து தரவேண்டும், பாதுகாப்பு அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மேலும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை பெற மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை விண்ணப்பிக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும்.
 
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் காற்று மாசு அடைவதற்கு ஆதாரம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
ஸ்டெர்லைட் ஆலை மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. மேலும் ஆலையின் உரிமத்தை 3 வாரத்தில் புதுப்பித்து அளிக்கவும் உத்தரவு வழங்கியது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த ஆலை திறக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட வாய்ப்புள்ளது.இந்த உத்தரவு காரணமாக தூத்துக்குடி மற்றும் தமிழக மக்கள் கொதி மனநிலையில் உள்ளனர்.
 
தீர்ப்பு குறித்து சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறினார்.
 
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால் ஸ்டெர்லைட் தரப்பு தற்ப்போது கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது.
 
ஆலையை எதிர்த்து அமைதியாக போராடிய 13 பேரை சுட்டு கொன்ற வடு இன்னும் மறையாததால் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவால் தூத்துக்குடியில் தற்போது  பதட்டம் கூடியுள்ளது என்கிறது லோக்கல் செய்தி தளங்கள் ..