கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 3 அனல் மின் நிலையங்கள் உள்ளன. இங்குள்ள மின் நிலையங்களில் நீராவி உருளைகள் சுழலும் போது கிடைக்கும் இயந்திர ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று இங்கு 2ஆவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தால் நிலையம் முழுவதும் புகைமூட்டத்துடன் சூழப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: விசாகப்பட்டினம் வாயுக்கசிவு: கொத்துக்கொத்தாக மக்கள் சாலையில் சுருண்டு விழுந்த பரிதாபம்

இந்த விபத்தின் காரணமாக அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீயை அணைக்க தீ அணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கால் நீண்ட நாட்களாக உற்பத்தி இல்லாத நிலையில் இன்று உற்பத்தியை தொடங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

முன்னதாக இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து இதுவரை 10க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இன்று நெய்வேலியில் விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.