வருமானவரி அதிகாரிகள் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்

தி.மு.. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவிட்டு, இரவு 8.15 மணி அளவில் அதிகாரிகள் சென்றனர். அதைத்தொடர்ந்து வெளியே வந்த துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின் வருமாறு :

சோதனை என்ற பெயரில் 3 நாட்கள் எங்களது தேர்தல் பணிகளை தடுத்துள்ளனர். இவ்வாறு தடுத்தால் நாங்கள் பயந்து விடுவோம் என்று நினைத்துள்ளனர்.

இதற்கு ஒரே காரணம் அரசியல் உள்நோக்கம் தான். அதிகாரிகள் வந்தார்கள் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து கேட்டார்கள், எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றோம். சென்று விட்டார்கள்.

2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை எவ்வாறு நிறுத்தலாம் என்பது அவர்களின் கணக்கு. வெற்றி பெறமுடியாதவர்கள் போடுகிற தப்புக்கணக்கு. இது முட்டாள் தனமான கணக்கு.

கழக பொருளாளர் துரைமுருகனை (சோதனை எனும் பெயரில்) அடித்தால் தி.மு..வினர் பயப்படுவார்கள் என்ற தப்புக்கணக்கு போட்டுள்ளனர். இதற்கு பின்புலமாக மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சியினர் இருக்கலாம். இதுகுறித்து எங்களுக்கு கவலை இல்லை.

தி.மு..வினர் வெற்றியை எவ்வாறு தடுக்கலாம் என்று திட்டமிட்டு இன்று என் வீடு, திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் வீடு போன்ற பல இடங்களில் இதுபோன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் இது மக்கள் மத்தியில் என்ன விளைவு ஏற்படும் என்ற அரசியல் அறிவு இல்லாதவர்கள் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

வேலூரில் உள்ள துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில், வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில்,  வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் சோதனை நடைபெறுவதால் தேர்தல் பணி மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது .