நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிவித்துள்ள நிலையில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் தந்தை சண்முகம் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வினால் மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளதா , அப்படி பாதிப்பு உள்ளதெனில் அதற்கான மாற்று வழிகள், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சட்ட வழிமுறைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழுவை கடந்த 10 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அமைத்தது.

நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் மெயில் அனுப்பலாம் என இக்குழு அறிவித்துள்ள நிலையில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் தந்தை சண்முகம் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், வீட்டின் வறுமையை தாண்டி அனிதா 12 ஆம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றதாகவும் அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழகத்தின் தலை சிறந்த 2 மருத்துவ கல்லூரிகளில் பயில்வதற்கு போதுமானது.

ஆனால் 1176 மதிப்பெண் பெற்ற அனிதாவிற்கு மருத்துவம் படிக்க தகுதியில்லை என மறுத்துவிட்டு நீட் தேர்வில் 720க்கு 150 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தவர்கள் பணம் இருந்தால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெறுவதாக அனிதாவின் தந்தை சண்முகம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வந்ததால் அனிதா மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது எனக் கூறியதால் அனைத்து தரப்பிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தனது மகளும் தாங்களும் துடிதுடித்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கான போட்டியிலும் வாய்ப்பிலும் அனிதா போன்றவர்கள் முழுமையாக புறக்கணிக்கப்படும் நிலையை அவர்களால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அனிதாவின் தந்தை சண்முகம், உணவுக்கு ரேஷன் கடைகளையே நம்பி இருக்கும் தங்களிடம் பல லட்சங்கள் செலவு செய்து கோச்சிங் செல்வதற்கும் , படிப்பதற்கு வசதிகளும் அருகாமையில் இல்லை என்று கூறியுள்ளார்.

12 ஆம் வகுப்பில் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற அனிதாவால் நீட் தேர்வில் ஏன் மதிப்பெண் பெற முடியவில்லை என்று கேள்வி கேட்கும் நீட் ஆதரவாளர்களிடம் தான் ஒரு கேள்வி எழுப்ப விரும்புவதாக கூறியுள்ள அனிதாவின் தந்தை, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களால் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை என எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் படித்த பாடத் திட்டத்திலும் பயிற்சி பெற்ற தேர்வு முறையிலும் அனிதா சாதித்ததாகவும், மாநில அரசு நடத்திய தேர்வு எழுதி அதற்கு மாநில அரசே வழங்கிய மதிப்பெண்களும் அர்த்தமற்று போனதால் அனிதா உயிரை மாய்த்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் சண்முகம் மனவேதனையுடன் கடிதம் எழுதியுள்ளார்.

ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு: நடிகர் சூர்யா