நிவர் புயல் எதிரொலியாக, தமிழகத்தில் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் 6 விரைவு ரயில்கள் மற்றும் 7 மாவட்டங்களில் 24.11.2020 மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (நவம்பர் 23) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் புதன்கிழமை பிற்பகலில் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர்- மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் 6 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருச்சி- சென்னை, தஞ்சை-சென்னை, சென்னை-தஞ்சை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மைசூர்- மயிலாடுதுறை, மயிலாடுதுறை- மைசூர் ரயில்கள் மற்றும் எர்ணாகுளம்-காரைக்கால் விரைவு ரயில் சேவை திருச்சியில் நிறுத்தப்படுகிறது. மேலும் முன்னெச்சரிக்கை காரணமாக 9 விரைவு ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும் 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம், அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிவர் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- தமிழக மின்சாரத்துறை