நிவர் புயல் கனமழை காரணமாக நாளை (நவம்பர் 24) நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டு இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீடு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைத்தன. அதில் 399 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து பொது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிவர் புயல் எதிரொலியால் நவம்பர் 24 நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நிவர் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாத வண்ணம் செவ்வாய் கிழமை (நவம்பர் 24) நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை (நவம்பர் 30) அன்று நடைபெறும் வகையில் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த விரிவான அறிக்கை மருத்துவக் கல்வி தேர்வு குழு இணையதளத்தில் வெளியிப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்திரவுப்படி நாளை கலந்தாய்வுக்கு ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு சுகாதார துறை மூலம் தக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நிவர் புயல் மற்றும் கனமழை எதிரொலியாக, 25, 26, 27 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிவர் புயல் எதிரொலி: தமிழகத்தில் ரத்தான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை