நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மேற்கு வங்க மாநிலத்தின் மோய்ரா மற்றும் மதுஜோரே ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் சரியான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை; முறைகேடாக சுரங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., நிலக்கரித்துறை முன்னாள் செயலர் எச்.சி. குப்தா உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு தில்லி நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தது.
 
இந்நிலையில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலர் குப்தா உள்ளிட்டோருக்கு 3 ஆண்டு சிறைதணடனை விதித்து தில்லி நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கானது புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் குற்றச்சதி நடந்துள்ளதை உறுதிப்படுத்திய சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பாரத் பராஷார், முன்னாள் நிலக்கரித்துறை செயலர் எச்.சி.குப்தா, விகாஸ் மெட்டல்ஸ் & பவர் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விகாஸ் பாட்னி, அதே நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் மாலிக், ஓய்வு பெற்ற நிலக்கரித்துறை அதிகாரி கே.சி.சம்ரியா மற்றும் நிலக்கரித்துறை முன்னாள் இணை செயலாளர் கே.எஸ்.குரோப்பா ஆகியோரை குற்றவாளிகளாக அறிவித்தார்.
 
அத்துடன் நிலக்கரித்துறை செயலர் எச்.சி.குப்தா, அதிகாரிகள் குரோப்பா, கே.சி. சம்ரியா ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் விகாஸ் பாட்னி, ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி பாரத் பராஷார் தீர்ப்பு வழங்கினார்.
 
தண்டனை காலம் மூன்று வருடம் இருந்தால் ஜாமின் பெறலாம் என்பதால் குப்தா உரோப்பா, கே.சி. சம்ரியா ஆகியோர் ஜாமின் பெற்றனர்
 
கூடுதலாக விகாஸ் மெட்டல்ஸ் மற்றும் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.