நித்யானந்தா பிடியில் இருக்கும் இரு சிஷ்யைகளை டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் ஆஜர் படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரூவைச் சேர்ந்தவர் ஜனார்த்தன ஷர்மா நித்யானந்தாவுடைய செயலாளராக வேலை பார்த்து வந்தவர். இவருக்கு 19 மற்றும் 15 வயதில் இரு மகள்களும்,13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மூன்று பிள்ளைகளையும் பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்த்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஆசிரமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கடும் சித்ரவதை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்ததால், தனது பிள்ளைகள் மூவரையும் சந்திப்பதற்காக ஜனார்த்தன ஷர்மா பெங்களூர் ஆசிரமத்திற்கு சென்றார். ஆனால் அவர்கள் அங்கிருந்து அகமதாபாத் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் அங்கு சென்ற ஜனார்த்தன ஷர்மாவை ஆசிரம நிர்வாகிகள் அடித்து விரட்டியுள்ளனர். இதையடுத்து ஜனார்த்தன ஷர்மா குஜராத் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பிடம் புகார் அளித்தார். அதனால் அவரது 15 வயது மகளும், 13 வயது மகனும் மீட்கப்பட்டனர். ஆனால் தனது மற்றொரு 19 வயது மகளை மீட்க முடியவில்லை.

ஜனார்த்தன ஷர்மா அளித்த புகாரின் பேரில் நித்யானந்தா அவரது சிஷ்யைகள் பிரியா தத்வா, ப்ரான் பிரியா ஆகிய மூவர் மீது அகமதாபாத் விவேகானந்த நகர் காவல் நிலையத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பிரியா தத்வா, ப்ரான் பிரியா இருவரை போலீசார் ஆசிரமத்தில் வைத்து கைது செய்தனர். இந்நிலையில் தனது மற்றொரு பெண்ணை குறித்து தகவல் தெரியாததால் அவரை மீட்டு தரும்படி ஜனார்த்தன ஷர்மா அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நித்யானந்தா பிடியில் இருக்கும் தத்துவ பிரியானந்தா, நந்திதா என்ற இரு சிஷ்யைகளை டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் ஆஜர் படுத்த வேண்டும் என குஜராத் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.