நித்தியானந்தா தனக்கு கமிட்மென்ட் கொடுத்தவர்கள் அதை காப்பாற்ற வேண்டும் என பாஜக மற்றும் 3 முறை தீவிரவாத காரணங்களுக்காக தடைசெய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை மறைமுகமாக குறிப்பிட்டு, புலம்பி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சர்ச்சைக்கு பேர் போன சாமியார்களில் ஒருவர் நித்யானந்தா. காவி உடையில் சாமியார் வேஷம் போட்டுக்கொண்டு, தான்தான் சிவனின் அவதாரம், சிவபெருமான் என்றெல்லாம் கூறிக்கொண்டிருப்பவர் நித்யானந்தா.

நித்யானந்தா மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் உள்ளன. பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபடும் நித்யானந்தா குறித்து பாலியல் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் எதற்கும் பயப்படாமல் தொடர்ந்து பாலியல் விவகாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக நித்யானந்தாவுடன் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தவர்கள் பலரும், வெளியில் வந்து நித்யானந்தா மீது ஆதாரங்களுடன் கூடிய பல்வேறு புகார்கள் கொடுத்தும், நித்யானந்தாவை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இதற்கு காரணம் பாஜக மற்றும் 3 முறை தீவிரவாத காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணையோடு தான் நித்யானந்தா செயல்பட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. காரணம் மோடி, முதல் ஹெச்.ராஜா வரை பல்வேறு பாஜக தலைவர்களும் நித்யானந்தாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தா திடீரென வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக ஆளும் பாஜக அரசின் உதவியுடன் தான் தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தா தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து நித்யானந்தா புதிய ஆன்மீக தேசத்தை உருவாக்கி இருப்பதாகவும் அதற்கு கைலாசா என்று பெயர் வைத்து இருப்பதாகவும் அறிவித்தார். மேலும் யூடியூப் சேனல் ஒன்றில் தினம் தினம் வீடியோக்கள் வெளியிட்டு,

கைலாசா நாட்டிற்கு என தனி ரிசர்வ் பேங்க், தனி கரன்சிகள் என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார் நித்தி. கைலாசாவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், விரும்புபவர்கள் மெயில் அனுப்புங்கள் எனக் கூறினார்.

கைலாசா நாட்டில் சிஷ்யைகளுடன் வசித்து வருகிறார் நித்தி, இந்நிலையில் அவர் வெளியிட்டு வரும் ஒவ்வொரு வீடியோக்களும் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. அடிக்கடி மாறுவேடம் போட்டு கொண்டு தன்னை பராசக்தி, வெங்கடாஜலபதி என கூறிவரும் நித்தி, ஆட்சியாளர்களையும் விமர்சித்து வருகிறார்.

ஒரு நாட்டின் அதிபர் என தன்னை கூறிக்கொள்ளும் நித்தியானந்தா மீது சமீப காலமாக மீண்டும் ஏராளமான பாலியல் புகார்கள் எழத் தொடங்கியுள்ளது. கைலாசாவிலும் பாலியல் துன்புறுத்தல்களை நித்தி ஆரம்பித்து விட்டார் என்பதுதான் அது.

குறிப்பாக கடந்த சில வாரங்கள் முன்பு கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் காவல்துறைக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண், நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் ஒன்றை இமெயில் மூலம் அளித்துள்ளார். புகார் அளித்த அந்தப் பெண் பெயர் சாரக் லான்டரி.

அந்த புகாரில், கைலாச நாட்டில் இருக்கும் நித்யானந்தா சாமியார் அவரது சிஸ்யைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறியிருந்தார். ஆனால் அந்த புகார் மீது இதுவரை வழக்கு பதியப்படவில்லை. இமெயில் மூலம் அனுப்பப்படும் புகாருக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், நேரடியாக வந்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நித்யானந்தா வெளியிட்டுள்ள ஒரு காணொளி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சேர்ந்தவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அந்த காணொளியில் நித்தி கூறியிருப்பதாவது, “யாரிடமும் நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். ஆனால் கமிட்மெண்ட் செய்தார்கள் என்றால் அந்த நேர்மையை காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பேன்,

நான் தானே கமிட் செய்தேன் இப்போது அதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என எனக் கூறினால் முடியாது. எத்தனை ஆண்டுகள் என்னுடன் இருந்தாலும் ஒரு சூழ்நிலையில் எப்படி முடிவெடுப்பேன் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது, நீங்கள் மிகப் பெரிய தவறு என்று நினைக்கிற ஒரு சூழ்நிலையை மிக எளிமையாக தீர்த்து விடுவேன்,

மிகவும் சிறிய தவறு என்று நீங்கள் நினைக்கும் சூழ்நிலையை ஆழ்ந்து புரியவைப்பேன் அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் கொடுத்த கமிட்மென்ட் காப்பாற்றப்பட வேண்டும், அந்த கமிட்மெண்ட்டை வைத்து உங்கள் எல்லோருக்கும் உபயோகமான பல விஷயங்களை வைத்திருக்கிறேன்.

உங்கள் எல்லோருடைய கமிட்மென்ட்டையும் வைத்துத்தான் இந்த கைலாசாவை கட்டியெழுப்பி இருக்கிறேன், ஆக கமிட்மென்ட்டை காப்பாற்றினால்தான் நாம் ஒருத்தருக்கு ஒருத்தர் நன்மை செய்து கொள்கிற இந்த கைலாயா என்கிற கப்பல் பயணிக்கும்.

சிலநேரங்களில் நான் இயங்கும் தர்மம் உங்களுக்கு புரிவதில்லை, நான் இயங்கும் தர்மம் உங்களுக்கு புரிந்தால் உங்களுக்குள் இயங்கும் பரம்பொருள் பரமசிவம் இயங்கும் தர்மம் உங்களுக்கு புரியும்” எனக் கூறியுள்ளார்.

இந்த காணொளி குறிப்பாக பாஜக மற்றும் 3 முறை தீவிரவாத காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ், நித்யானந்தாவிற்கு கொடுத்த கமிட்மென்ட்டை தற்போது நிறைவேற்றவில்லை என்பதாலையே நித்தி புலம்பி வீடியோ வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.