நிதித் துறை உதவிப் பிரிவு அலுவலர் உள்பட குரூப் 2 பிரிவில் காலியாக உள்ள ஆயிரத்து 199 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெள்ளிக்கிழமை வெளியிட்ட விவரம் :
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (16 காலியிடங்கள்),
தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர் (26),
சார்-பதிவாளர்கள் (73), நகராட்சி ஆணையாளர் (6),
உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர் (95),
வேளாண் விற்பனை சேவை கண்காணிப்பாளர்கள் (118) உள்பட ஆயிரத்து 199 காலியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வின் தகுதி :
பட்டப் படிப்பு முடித்தவர்கள் எழுதலாம்.
ஆனால், தொழிலாளர் நலத் துறை, வேளாண்மை உள்ளிட்ட சில துறைகளுக்கான எழுத்துத் தேர்வினை எழுத அந்தத் துறை தொடர்பான பட்டப் படிப்புகளைப் படித்திருக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தேர்வு முறை :
முதல் நிலைத் தேர்வு: குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்வுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தின் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.
முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பிரதானத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்தால் பதிவுக் கட்டணம் செலுத்தி தனியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பதிவு செய்யாவிட்டால், ரூ.150 கட்டணம் செலுத்தி முதலில் பதிவு செய்ய வேண்டும்.

இதன் பின், முதல் நிலைத் தேர்வுக்கு ரூ.100 கட்டணமும், அதில் தேர்ச்சி பெற்று பிரதானத் தேர்வுக்குச் செல்வோர் ரூ.150-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியினர்), பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கணவரால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வில் பங்கேற்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. முதல் நிலைத் தேர்வானது, 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

பொது அறிவு உள்ளிட்ட விஷயங்கள், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். குறிப்பிட்ட அளவு வினாக்கள் பத்தாம் வகுப்பை அடிப்படையாகக் கொண்டும் கேட்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்களாக 90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.