நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பேசிய வீடியோ வைரலான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து அம்மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார்.

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஆவடி – இமாகுலேட் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஆர்.பிரியா, அம்பத்தூர் – எபினேசர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் கே.திவ்யா, ஆவடி- நசரத் அகாடமியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோர் பேசிய வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோவை பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.3.2022) அம்மாணவிகளை தலைமைச் செயலகத்தில் அழைத்துப் பேசினார். அப்போது, அம்மாணவிகள் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் வகுப்பில் சேர்த்திட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும்,

தாங்கள் வசிக்கும் ஆவடி நரிக்குறவர் காலனியை மேம்படுத்திடவும், தங்கள் கல்விக்கு தேவையான உதவிகளை செய்திடவும் கேட்டுக் கொண்டார்கள்.

மேலும் பள்ளி மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அம்மாணவிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அம்மாணவிகளிடம் நம்பிக்கையூட்டும் வகையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனிருந்தார்.