தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஏற்கனவே அவர் ஹ்ரித்திக்ரோஷனை காதலிப்பதாக சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் வீடு வாங்கிவிட்டு புரோக்கர் கமிஷன் கொடுக்காத நடிகை கங்கனா ரணாவத்திற்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டு மும்பையின் பாந்த்ரா பாலிஹில்லில் 3075 சதுர அடி கொண்ட பங்களா ஒன்றை 20.07 கோடி கொடுத்து வாங்கினார். இந்த பங்களாவை வாங்க கர்மா ரியல்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பிரகாஷ் என்பவர் உதவி செய்து கொடுத்து வீடு வாங்கும் ஒப்பந்தம் செய்ய உதவினார். கங்கனாவும் அவரது சகோதரியும் சேர்ந்து இந்த சொத்தை வாங்கினர். வீடு வாங்கிக்கொடுத்ததற்காக கங்கனா பேசியபடி தனக்கு கமிஷன் முழுமையாக கொடுக்கவில்லை என்று கூறி பாந்த்ரா போலீசில் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கங்கனாவிற்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆனால் கமிஷனாக ஒரு சதவீதம் கொடுக்கப்பட்டு விட்டதாக கங்கனா தெரிவித்துள்ளார். 22 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலம் பிரகாஷிற்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டதாக தெரிவித்த கங்கனா, அதோடு புரோக்கர் கமிஷனாக இரண்டு சதவீதம் கொடுக்கப்படும் என்று முன்கூட்டியே பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

இது குறித்து கங்கனாவின் சகோதரி ரங்கோலியிடம் கேட்டதற்கு, போலீசார் கேட்ட விளக்கங்களுக்கு ஏற்கனவே பதில் கொடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். ஆனால் சப் இன்ஸ்பெக்டர் சஸ்கர் தனக்கு இன்னும் பதில் வந்து சேரவில்லை என்று தெரிவித்தார். கங்கனா வாங்கிய வீட்டிற்கு முத்திரை தீர்வையாக ரூ.1.03 கோடி செலுத்தி இருக்கிறார். பங்களாவுடன் 565 சதுர அடி கார்ப்பார்கிங் இடமும் அடங்கும்.