நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் செயலாளராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பல்வேறு மாற்றங்களை செய்து வந்தார். பின்னர் தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகர் விஷால் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து அவர் செய்து வந்த நடவடிக்கைகளுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தன்று மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் நடிகர் விஷால் அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் கூறுகையில், “அம்மாவுக்கு மாற்றாக யாரும் வர முடியாது. அவருக்கு நினைவிடம் சிறப்பாக கட்டப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நல்ல விஷயம். ஜெயலலிதா இரும்பு பெண்மணி. அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயரை சூட்டுவது குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என கூறினார்.