தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பித்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் நகரங்களில் அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிததுள்ளனர். எனவே, தற்போதுள்ள சூழ்நிலைகளையும், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், கீழ்க்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

அதன்படி சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் 26.4.2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 29.4.2020 புதன் இரவு 9 மணி வரை 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

சேலம், திருப்பூரில் 26.4.2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 28.4.2020 செவ்வாய் இரவு 9 மணி வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமலாகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில், அத்தியாவசியப் பணிகள் தவிர வேறு எந்தப் பணிகளுமே அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: 10 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி- தமிழக அரசு

மேலும் 5 மாநகராட்சிகளில் முழுஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பான தமிழக அரசின் அரசாணையில், பெட்ரோல் பங்க் காலை 8 முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சு ஊடகம், காட்சி ஊடகங்களுக்கு கட்டுப்பாடு தளர்வு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேஸ் விநியோகம், நியாயவிலை கடைகள் வழக்கம் போல் செயல்படும். உணவககங்களில் உணவு பொருட்களை தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிகளுக்கு உட்பட்டு செயல்படும்.

மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் 33% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி. தலைமைச்செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை தேவையான பணியாளர்களுடன் செயல்படும். மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.